search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் மீட்பு"

    • கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
    • அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மரியான் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ்.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 24), கார்த்திக், அருள், பிச்சையா, இஸ்ரவேல், அழகாபுரியை சேர்ந்த மதன், பாலா, நிவாஸ், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குணா உள்ளிட்ட 10 மீனவர்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கேரளா மாநிலம் மினிக்காய் தீவில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினிக்காய் தீவு கடலோர காவல்படை, அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு அந்த படகு மூலம் கயிறு கட்டி பழுதான படகை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களும், பழுதான படகும் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.
    • கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர்.

    பெங்களூரு:

    கோவா மாநிலம் பனாஜியில் கிறிஸ்டோரே என்ற மீன்பிடி படகில் 27 மீனவர்கள் அரபிக்கடலின் நடுப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு படகு வழி தவறியது. இந்த படகில் இருந்த மீனவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அவர்களுடைய படகு எந்த பகுதியில் உள்ளது? என ஆய்வு செய்தபோது கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் அருகே அங்கோலாவில் உள்ள பெலிகேரி துறைமுகத்திலிருந்து 30 கடல் மைல் தொலைவில் படகு தத்தளிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.

    கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து படகில் இருந்த 27 மீனவர்களும் பத்திரமாக மீட்டு அவர்களை மீட்டு பாதுகாப்பாக பெலிகேரி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

    • நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர்.
    • படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மீனவர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து படகில் இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது. படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர்.
    • மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது52). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். அந்த படகில் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து படகின் உரிமையாளரான ஆரோக்கியம், ஆன்றோ(47) உள்பட 16 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கன்னியாகுமரி கிழக்கு கடல் பகுதியான உவரி பகுதியில் அவர்களது படகு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சூறைக்காற்று வீசியது.

    இதனால் ராட்சத அலையில் சிக்கி அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 16 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் அனைவரும் தத்தளித்தபடி கிடந்தனர். இதனை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பார்த்தனர்.

    அவர்கள் கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர். ஆன்றோ, பையாஸ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மாயமாகினர். அவர்களை கடலில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீட்கப்பட்ட 13 மீனவர்களை தங்களது படகிலேயே கரைக்கு அழைத்து வந்தனர்.

    கடலில் 3 மீனவர்கள் விழுந்து மாயமானது. குறித்து குளச்சல் விசைப்படகு சங்கம், மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரின் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

    மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • மீனவர்கள் கடலில் தவிப்பதை பார்த்த கடற்படை வீரர்கள் 3 படகுகளுடன் 36 மீனவர்களையும் மீட்டனர்.
    • மீனவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் அவர்களை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். தமிழக கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்தபோது வானிலை மாற்றம் காரணமாக அவர்களால் கரை திரும்ப முடியவில்லை.

    மேலும் அவர்களது படகில் என்ஜின் கோளாறும் ஏற்பட்டதால் நடுக்கடலிலேயே அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்.கஞ்சர் ரோந்து சென்றது. மீனவர்கள் கடலில் தவிப்பதை பார்த்த கடற்படை வீரர்கள் 3 படகுகளுடன் 36 மீனவர்களையும் மீட்டனர். மீனவர்கள் 36 பேரும் 2 நாட்களாக கடலில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் அவர்களை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நாகை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதுபற்றி கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், மீனவர்கள் 3 மீன்பிடி கப்பல்களில் இருந்தனர். சவாலான சூழ்நிலையில் 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர். 2 நாட்களுக்கும் மேலாக கடலில் தவித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
    • சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.

    பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.

    • படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
    • மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடைக்காலம் முடிவு பெற்றதால் ஏராளமான மீனவர்கள் நேற்று நள்ளிரவுகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    இதில் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பனுக்கு என்பவரும் சொந்தமான படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நாகையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீர் உட்புகுந்து கடலில் படகு மூழ்கியது.

    இதனால் படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டம் நாகராஜன் என்பவரும் சொந்தமான படகும் கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. படகில் சென்ற ரெத்தினம், குஞ்சாலு, சிவக்குமார் ஆகிய 3 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச்சென்ற முதல் நாளே இரண்டு படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
    • அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

    மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.

    படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.

    அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

    மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகு திடீரென பழுதானது.
    • மீனவர் குடும்பத்தினர் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

    நாகர்கோவில்:

    நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகதாஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 2-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் தேங்காப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கோவா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகு திடீரென பழுதானது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். மீனவர்களின் படகு பழுதானது குறித்து தூத்தூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீனவர் குடும்பத்தினர் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் நடுக்கடலில் பழுதாகி இருந்த விசைப்படகை அந்த வழியாக மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பி வந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு கோவாவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நடுக்கடலில் பழுதாகி நின்ற படகையும் கரைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மீனவர்கள் மீட்கப்பட்ட தகவல் இங்குள்ள அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று அல்லது நாளை மீட்கப்பட்ட மீனவர்கள் கோவா வந்து சேருவார்கள் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • விசைப்படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் இருந்த மீனவர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
    • நாங்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த நிலையில், 23-ந் தேதி அந்த பகுதியில் புயல் காற்று வீசியது.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க ஒரு விசைப்படகு புறப்பட்டுச் சென்றது.

    அந்த விசைப்படகில் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வர்க்கீஸ், டைட்டஸ், ஆண்டணிதாசன், குளச்சலை சேர்ந்த விஜூ, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். அவர்கள் ஆழ்கடலில் சாலமன் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அவர்களது விசைப்படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் இருந்த மீனவர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையால் கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்கள் தாங்கள் கரை திரும்ப இலங்கை விசைப்படகு மற்றும் இங்கிலாந்து கப்பல் பெரும் உதவி புரிந்ததாக கூறி அதில் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    கடந்த மாதம் 4-ந் தேதி சாலமன் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எங்களது படகின் கியர்பாக்ஸ் திடீரென பழுதானது. இதனால் படகை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படகின் உரிமையாளர் வர்கீஸ், பழுதை சரி செய்வதற்காக அதன் பாகத்தை எடுத்துக் கொண்டு, அந்த வழியாக வந்த தேங்காப்பட்டணம் படகில் ஏறிச் சென்று விட்டார்.

    நாங்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த நிலையில், 23-ந் தேதி அந்த பகுதியில் புயல் காற்று வீசியது. இதில் நங்கூரம் உடைந்ததால் படகு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் நாங்கள் அச்சத்திற்கு உள்ளானோம்.

    அப்போது அந்தப் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் நிலை அறிந்து தங்களது படகில் ஏற்றி, பாதுகாப்பாக அருகில் இருந்த தீவில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். அந்த தீவில் சுமார் 5 நாட்கள் உணவின்றி தவிப்புக்குள்ளானோம்.

    எங்களை காப்பாற்றப் போவது யார்? என எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த வழியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிராம்பியன் என்டூரன்ஸ் என்ற பல்நோக்கு கப்பல் வந்தது. நாங்கள் சைகை காட்டி கப்பலை உதவிக்கு அழைத்தோம். அதில் இருந்தவர்கள் எங்களை காப்பாற்றி மீட்டனர்.

    பின்னர் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விழிஞ்சம் கடற்படையினர், இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் எங்களை ஒப்படைத்து விட்டு இங்கி லாந்து கப்பல் சென்று விட்டது. கடற்படையினர் எங்களை விழிஞ்சம் துறைமுகம் அழைத்து வந்தனர்.

    நாங்கள் இன்று உயிருடன் இருக்க காரணமாக இருந்த இலங்கை மீனவர்கள், இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையில் பழுதான படகின் பாகத்தை சரி செய்து எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளர் கடலுக்குச் சென்றார். அவருக்கு மீனவர்கள் கரை திரும்பிய விவரத்தை சேட்டிலைட் போன் மூலம் கடற்படையினர் தெரிவித்தனர்.

    • நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி-பாம்பனுக்கு இடையே 8 நாட்டிக்கல் தென்கிழக்கு கடல்பகுதியில் சூடை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மகேஸ்வரன், ராஜ்குமார், முனீஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட 9 மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி-பாம்பனுக்கு இடையே 8 நாட்டிக்கல் தென்கிழக்கு கடல்பகுதியில் சூடை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பைபர் படகு என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் படகில் இருந்து 9 மீனவர்களும் நடுக்கடலில் நீண்ட நேரம் தத்தளித்தனர்.

    பல மணி நேரத்துக்கு பின்னர் அந்தப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் கடலில் உதவி கேட்டு தத்தளிப்பதை கண்டு அவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர்.

    • காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் வழக்கம்போல் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்த போது, படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மேடு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம்(40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய ஏழு மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு 21-ந்தேதி மாலைக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் மாலை 6 மணிவரை மீனவர்கள் கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் மாயமான ஏழு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் காரைக்கால் மேடு சக மீனவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மாயமான மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (23 -8-22) காலை கோடியக்கரை அருகே மாயமான ஏழு மீனவர்களின் பைபர் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை, கடலில் தேடி சென்ற சக மீனவர்கள் பார்த்து, உடனடியாக ஏழு மீனவர்களையும் மீட்டு தங்கள் விசைப்படகுகளில் ஏற்றினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு, முதல் கட்டமாக தண்ணீர் மற்றும் உணவு வழங்கினர். இவர்களுக்கு நாகை மீனவர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் காரைக்காலுக்கு பத்திரமாக நேற்று இரவு திரும்பினர்.

    ×